

நம்பியூரில் நடைபெற்ற மாநில அளவிலான மராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பரிசு வழங்கினார்.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மற்றும் நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க என்ற தலைப்பில் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 14 வயதுக்குட்பட்டோருக்கு 3 கிமீ், 19 வயதுக்குட்பட்டோருக்கு 10 கிமீ, 40 வயதுக்குட்பட்டோருக்கு 12 கிமீ, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 கிமீ என நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. சந்திரகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பெருமாள்சாமி, நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.