கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் பகுதியில் கல்குவாரி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் நடராஜை, மாவட்ட நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில் தற்காலிக பணிநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பணி நீக்க உத்தரவை கோட்டாட்சியர் திரும்ப பெற்றுக் கொண்டதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலைந்து சென்றனர்.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் சட்டவிரோத கல்குவாரியில் வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக புஞ்சைத்துறையாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் நடராஜை, மாவட்ட நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது.


ஆனால் ஒவ்வொரு முறையும் சட்டவிரோத கல்குவாரி குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் நடராஜ், தற்காலிக பணிநீக்க உத்தரவை வாங்க மறுத்தார்.
பணியிடை நீக்க ஆணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று கோபி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போவதாகவும், தொடர் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்தனர்.


அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் தற்காலிக பணிநீக்க உத்தரவை கோட்டாட்சியர் திரும்ப பெற்றுக் கொண்டதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலைந்து சென்றனர்.