கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் அத்திக்கடவு அவினாசி திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்த நிலையில் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் வரப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் ஐந்தாவது நீர் ஏற்ற நிலையம் செயல்பட்டு வருகிறது.


இந்தத் திட்டத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிலையில் நம்பியூர் அருகே உள்ள சாலைபாளையம் என்ற இடத்தில் அத்திக்கடவு அவினாசி திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதால் தண்ணீர் சுமார் 10 அடி உயரத்திற்கு ஆர்ப்பரித்து வெளியேறியது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அத்திக்கடவு அவினாசி திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் உடனடியாக நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீரை நிறுத்தி உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பழுது நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.