அரசு போட்டி தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. நம்பியூர் ஒன்றியம் முழுவதும் மிகவும் பின் தங்கிய கிராமப்புற பகுதி என்பதால், போட்டி தேர்விற்கான 8 வார கால பயிற்சியை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து நேற்று நம்பியூரில் உள்ள குமுதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இலவச போட்டி தேர்விற்கான பயிற்சியை நம்பியூர் ஒன்றிய செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவருதலைவருமான செந்தில்குமார் தொடங்கி வைத்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக பயிற்சி கையேடுகளை வழங்கினார்.குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவத்துறை இணை இயக்குநர் சண்முகவேலு, பேரூராட்சி துணைத்தலைவர் தீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ராஜ்குமார், பாசில், ஆசிரியர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டி தேர்விற்கான பயிற்சியை ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கிருபாகரன் வழங்கினார். பயிற்சியில் நம்பியூர், கோசனம், சாவக்காட்டுபாளையம், மலையப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 6 வாரங்கள் தொடர்ந்து பயிற்சியும் அதைத்தொடர்ந்து இரு வாரங்கள் தேர்வும் வைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 5 பேர் அரசு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.