கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூார், சக்கராபாளையம் பகுதியில் 10 வீடுகள் இடிக்கப்பட்டு, நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 4.50 ஏக்கர் நிலத்தை நீர்வள ஆதாரத்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் மீட்டனர்.


கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர், சக்கர பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் நீர்வள ஆதாரத்துறை க்கு சொந்தமான 4.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் பாசன நீர் செல்ல முடியாமலும், பாதை வசதி இல்லாமல் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்,


இந்த நிலையில் வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது, நீர்வழி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, வருவாய் துறையினர் உதவியுடன் நிலம் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.


ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்து கொள்ள கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியும், வீடுகளை காலி செய்து கொள்ள முன்வராத நிலையில், இன்று கோபி வருவாய் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் 10 வீடுகளிலும் இருந்த பொருட்களை வெளியேற்றி விட்டு, மின் இணைப்பை துண்டித்து விட்டு பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடித்து அகற்றினர்.
மேலும் சக்கர பாளையம் உப கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது சுமார் 1.5 கிலோமீட்டர் தூரமுள்ள 4.50 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு அதில் இருந்த கால்நடை தீவனப் பயிர்,தென்னை, வாழை, உள்ளிட்டவை அகற்றப்பட்டது.