கோபி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறிய பெண்களை படம் எடுத்து ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டும் கும்பல். கும்பலை கைது செய்வதுடன், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு தருமாறு கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்டனர்.


.கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட சத்திரம்புதூர், வேட்டுவன்புதூர், புள்ளப்பநாய்க்கனூர், கொடிவேரி மேடு,அம்பேத்கார் நகர், ஒட்டர்பாளையம், மினியப்பன்நகர் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் வீடு இல்லாத 650 குடும்பங்களுக்கு, சென்றாயன்பாளையம் கிராமத்தில் மாதேஷ்வரன் கோயில் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது.
கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு உரிய இடம் அளவீடு செய்து கொடுக்கவில்லை. இதனால் பல ஆண்டுகளாக அவரவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவிற்கு உண்டான இடத்தை அளவீடு செய்து தருமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் பட்டா பெற்ற சுமார் 30 குடும்பத்தினர், வாடகை கொடுக்க முடியாத நிலையில், அரசு வழங்கிய இடத்தின் ஒரு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலியாக உள்ள இடங்களில் வீட்டுமனை பட்டா பெற்றுத்தருவதாக கூறி கடந்த இரண்டு மாதங்களாக அதே பேரூராட்சி பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், டி.என்.பாளையம், குன்றி, கடம்பூர், வாணிப்புத்தூர், அளுக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்ததோடு, அங்கு அவர்கள் குடியிருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுமனை பட்டா பெற்ற 200 க்கும் மேற்பட்டோர், உரிய இடத்தினை அளவீடு செய்து தருமாறு கூறி கோபி சப் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு. சப் கலெக்டர் சிவானந்தத்திடம் மனுவும் அளித்தனர்.
இந்நிலையில் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பட்டா பெற்றுத்தருவதாக கூறி பணம் வசூலித்து வரும் கும்பல், ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், அரசு வழங்கிய பட்டாவை கையில் வைத்துக்கொண்டு கொடிவேரி மேடு அருகே வீரசின்னானூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டம் காரணமாக கொடிவேரியில் இருந்து நால்ரோடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பேச்சுவார்த்தையே ஏற்க மறுத்த கிராம மக்கள், ஆக்கிரமிப்பு செய்ததுடன், அதை தட்டி கேட்ட பெண்களை படம் எடுத்து ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டல் விடுக்கும் கும்பலை கைது செய்ய வேண்டும். அரசு வழங்கிய பட்டா உள்ளவர்களை தவிர மற்ற ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அங்கு இருந்து அகற்ற வேண்டும் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது, அரசு வழங்கிய இடத்தில் கடந்த இரண்டு மாதங்களாக 250க்கும் மேற்பட்டோர் குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனு அளித்த பிறகு, ஒரு கும்பல் எங்களை மிரட்டி வருகிறது.இரவு முழுவதும் ஏராளமான வாகனங்கள் வருவதும், வெளியூரை சேர்ந்த பலரும் இரவு பகலாக வந்து செல்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் பயத்துடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சப் கலெக்டரிடம் மனு அளித்த பிறகு, 5 பேர் கொண்ட கும்பல், உடனடியாக வீடுகளை கலி செய்ய வேண்டும் என எங்களை மிரட்டுவதோடு, புகைப்படம் எடுத்து ஆபாசமாக வெளியிடுவதாகவும் மிரட்டுகின்றனர். அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.