நம்பியூர் அருகே உள்ள திட்டமலையில் உணவு தேடி வந்த புள்ளிமான் கம்பி வேலியை தாண்டிய போது, மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தது.நம்பியூர் அருகே உள்ள டி.என் பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான மான், கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.
இதில் புள்ளி மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நம்பியூர் அருகே உள்ள திட்டமலை சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளது. நேற்று திட்டமலை பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் ஒன்று உணவு தேடி தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை தாண்டி குதிக்கும் பொழுது அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி மயக்கமடைந்தது. அருகில் இருந்த இளைஞர்கள் மானை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர்.
ஆனால் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல உணவிற்காக இப்பகுதியில் சுற்றி வரும் மான்கள் சாலை விபத்தில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள மான்களை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.