கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் குடும்பத்தகராறு காரணமாக திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் பழையூர் காலனியை சேர்ந்தவர் ரங்கன் மகன் சுரேஷ்குமார்(26). இவர் கோபியில் டெய்லராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் சத்தி அருகே உள்ள அங்கனகவுண்டன் புதூரை சேர்ந்த பழனி,மல்லிகா தம்பதியரின் மகள் கீதா(23) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்கு பிறகு இருவரும் பழையூர் காலனியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று சுரேஷ்குமார் கோபி சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த கீதா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த நம்பியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீதாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே கீதா தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.