கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் சாலையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி தனியார் பார்சல் நிறுவன வாகனம் விபத்து. வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.


கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் பிரிவிலிருந்து கரட்டூர் பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அத்தானியிலிருந்து தனியார் பார்சல் நிறுவன வாகனம் கோபி நோக்கி வந்து கொண்டிருந்தது, அப்போது பாரியூர் பிரிவு செல்லும் சாலையில் பார்சல் வாகனம் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விட முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக தடுப்புகளை உடைத்துக் கொண்டு மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி பார்சல் வாகனம் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் ஓட்டுநர் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பினார்.
இந்த விபத்தின் போது அந்தியூர்-கோபி சாலையில் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது, இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த வாகனங்களை சீர் செய்தனர், தொடர்ந்து விபத்தில் சிக்கிய பார்சல் நிறுவன வாகனத்தை கிரேன் உதவியுடன் குழியில் இருந்து மீட்டனர். பாரியூர் சாலையில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.