நம்பியூரில் தீவிபத்தில் இரு குடிசை வீடுகள் தீயில் எரிந்து முழுமையாக சேதமானது.


கோபி அருகே உள்ள நம்பியூர் காந்திபுரம்மேட்டை சேர்ந்தவர் கண்ணையன்(65). கூலித்தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு இவரது குடிசை வீட்டில் சாமி கும்பிடுவதற்காக விளக்கை ஏற்றி உள்ளார்.
இரவில் விளக்கில் இருந்த தீ குடிசை வீட்டில் பற்றியது. தீ மளமளவென பரவி, அருகில் இருந்த அங்கமுத்து(77) என்பவரது குடிசையிலும் பற்றியது. அங்கமுத்து குடிசைக்குள் இஸ்திரி கடையும் நடத்தி வந்தார்.

இதில் இரு குடிசைகளும் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்தில் இரு குடிசைகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள், மொபட், தள்ளு வண்டி, வாடிக்கையாளர்களின் துணி, கட்டில்கள், மிதிவண்டி என சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
தகவல் அறிந்த நம்பியூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.