கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.


அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

தற்போது கோடை விடுமுறையையொட்டி கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர்.
அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்டும், அணையின் கீழ் பகுதியில் கடற்கரை போன்ற மணல் பகுதியில் அமர்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் சுவையான மீன் வகையை சாப்பிட்டும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் விளையாடியும் உற்சாகமாக விடுமுறையை கழித்தனர்.
கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அணைக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.