ஈரோடு மாவட்டம் நம்பியூர் கோசனம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகோயில் பாளையத்தை சேர்ந்தவர் சடையப்ப கவுண்டர் மனைவி கருணாம்பாள்(74). இவர்களுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் விவசாய பூமி அதே பகுதியில் உள்ள சங்கரன் தோட்டத்தில் உள்ளது. இவர்களுக்கு வடிவேல்(48), நாமதேவன் (45) என்ற அரு மகன்கள் உள்ளனர்.வடிவேல் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனாம்பாள் என்ற மனைவியும், வெண்மிகாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

நமதேவனுக்கு திருமணமாகி இந்துமதி(28) என்ற மனைவியும், ஹரிஹரசுதன்(6) என்ற மகனும் நிதர்சனா(5) என்ற மகளும் உள்ளனர்.

சடையப்ப கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், சொத்துகளை இரு மகன்களுக்கும் கருணாம்பாள் பிரித்து கொடுத்துள்ளார். இதில் நாமதேவன் ஒரு வீட்டிலும், அவரது தாயார் கருணாம்பாள் ஒரு வீட்டிலும் வசித்து வந்தனர்.வடிவேல், வெள்ளகோயில்பாளையம் அருகே உள்ள புதுக்காடு என்ற இடத்தில் மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சொத்துகளை வடிவேலுவிற்கு சாதகமாக பிரித்து கொடுத்து விட்டதாக கூறி கடந்த சில ஆண்டுகளாகவே நாமதேவனும், அவரது மனைவி இந்துமதியும் தாயாரிடம் தகராறு செய்து வந்நுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கருணாம்பாளின் வீட்டிற்கு வந்த நாமதேவனும், அவரது மனைவி இந்துமதியும், கருணாம்பாளிடம் தகராறு செய்துள்ளனர். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த நாமதேவனும், இந்துமதியும் கருணாம்பாளை தாக்கியதுடன், அவரை பிடித்து தள்ளி உள்ளனர். இதில் நிலைகுலைந்த கருணாம்பாள் அருகில் இருந்த இரும்பு கதவின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமேற்பட்டுள்ளது. மண்டை உடைந்து ரத்தம் வெளியேறிய நிலையில், சிறிதும் கவலைப்படாத நாமதேவனும், அவரது மனைவியும், கருணாம்பாளை அப்படியே விட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.இந்நிலையில் கருணாம்பாளின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வடிவேலுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வடிவேல் வந்து பார்த்த போது, தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து வடிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற நம்பியூர் போலீசார் கருணாம்பாளின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதைத்தொடர்ந்து பெண்ணை கொலை செய்த மகன் நாமதேவன் மற்றும் அவரது மனைவி இந்துமதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சொத்திற்காக தாயை மகனே மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.