கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயானத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக்கூறி கிராம மக்கள் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியில் சுமார் 250க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம் சிங்கிரிபாளையம் அருகே தடப்பள்ளி வாய்க்கால் கரை பகுதியில் உள்ளது.


சுமார் 20 சென்ட் பரப்பளவில் உள்ள மயான பூமியில் 10 சென்ட் அளவிற்கான இடத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள தனியார் ஒருவர், மயான பூமியை ஆக்கிரமித்து பொக்லைன் இயந்திரம் மூலமாக மயான பூமியை சமன் செய்து முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் சடலத்தை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் மயானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக்கூறி 200க்கும் மேற்பட்டோர் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.