கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தில் பகவதி ராஜா என்பவரது போட்டோ ஸ்டுடியோவிற்குள் புகுந்த கொள்ளையர் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஹார்டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பகவதிராஜா(41). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொலவக்காளிபாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு பகவதி ராஜா ஸ்டுடியோவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் ஸ்டுடியோவிற்கு வந்த போது, கடையில் போடப்பட்டு இருந்த பூட்டு கழட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதைத்தொடர்ந்து ஸ்டுடியோவிற்குள் சென்று பார்த்த போது, உள்ளே இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், 3 ஹார்டு டிஸ்க் என சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ஸ்டுடியோவில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை பார்த்த போது,நள்ளரிவில் முகமூடி அணிந்த கொள்ளையன், ஸ்டுடியோ பூட்டை திறந்து உள்ளே சென்று செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் கம்ப்யூட்டர், பிரிண்டர், ஹார்டு டிஸ்க்கை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பகவதிராஜா இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொள்ளைச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையன், பூட்டை உடைக்காமல் சாவி மூலமாக திறந்து உள்ளே சென்று கொள்ளையடித்து இருப்பதால், தெரிந்த நபரே கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மற்றும் ஹார்டு டிஸ்க் மட்டுமே திருடப்பட்டு இருப்பதாலும், மற்ற கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை எடுத்து டேபிள் மீது வைத்து சென்று இருப்பதால், தொழில் போட்டி காரணமாக தெரிந்த நபரே கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொள்ளைச்சம்பவம் குறித்த பரபரப்பான சிசிடிவி காமிரா பதிவு வைரலாகி வருகிறது.