வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வலியுறுத்தியும், விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளிப்பட்டியில் போராட்டம்.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வன சரகத்தில் ஏராளமான யானை,புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. கோடை காலங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன், கால்நடைகளை கொன்று வருகிறது.


இதனால் பல இடங்களில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் வனத்துறை அனுமதியுடன் மின் வேலி அமைத்துள்ளனர். சில சமயங்களில் மின் வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்து வருகிறது.


அதைத்தொடர்ந்து மின் வேலி அமைத்த விவசாயி மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலை கடந்த சில நாட்களுக்கு முன் கரும்பாறை பகுதியில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த நிலையில் விவசாயி மீது டி.என்.பாளையம் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க கூறியும், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்வதை நிறுத்த வலியுறுத்தி கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.