கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதியில் மாலை திடீரென கன மழை பெய்ய தொடங்கியது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள சந்தன நகர் பகுதியில் உள்ள குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. தொடர் கனமழை காரணமாக குளத்திற்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருந்ததை தொடர்ந்து, குளத்தில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேறி வருகிறது.

இந்த குளத்தில் இருந்து தண்ணீர் சந்தன நகர், ஆண்டிக்காடு, கோரக்காடு, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நீர் வழித்தடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வழியாக வெளியேறி வருகிறது,
இந்த பகுதியில் உள்ள குளம் உடைப்பு ஏற்பட்டதால் இங்குள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் தாழ்வான இடங்களில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லவும் கால்நடைகளை பாதுகாப்பாக வைக்கவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.