12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கான “கல்லூரிக் கனவு” வழிகாட்டி நிகழ்ச்சி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்காரா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்காரா பேசும்போது.

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கான “கல்லூரிக் கனவு” எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமையும். கடந்த வாரம் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், ஈரோடு மாவட்டமானது 97.42 சதவீதம் பெற்று மாநில அளவில், 2ம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் பெற்ற 7வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமாக இருந்த மாணவ, மாணவியர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் தோல்வியடைந்தவர்கள் மனம் தளராமல் அடுத்து வரும் துணைத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கூடுதலாக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது.

குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் வருத்தமடையாமல் இன்று நடைபெறும் அனைத்து பாடங்கள் மற்றும் துறைகள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று பயனடையலாம். 12ம் வகுப்பு முடித்த அனைவரும் உயர்கல்வி படித்து பட்டம் பெறுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. தற்போது பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பெற கல்லூரி செல்ல உள்ள மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான பல்வேறு வாய்ப்புகள் விண்ணப்பிக்கும் மற்றும் தேர்வு செய்யும் முறைகள்,கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், மாணவர்களுக்கான தனிநபர் கவுன்சிலிங் உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படுவதுடன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ என 40க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு கல்லூரி பேராசிரியர்களால் வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது. எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்றாற்போலும், தங்களுக்கு விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெருவதோடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.தொடர்ந்து, போட்டித்தேர்வுகளில் பங்குபெறுவது, உயர்கல்விக்கு பிறகு தங்களுக்கான தொழில் பாதையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, பொறியியல், மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகள், மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கமூட்டுதல் நிகழ்வு, கலை மற்றும் அறிவியல், மானுடல் படிப்புகள் குறித்தும், அறிவு, திறன் மற்றும் மனப்பான்மைகள் ஆகிய தலைப்புகளில் கல்வியாளர்கள், சாதனையாளர்கள், தொழில் நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்களின் வழிகாட்டி கருத்துரைகள் நடைபெற்றது.தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்காரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு “கல்லூரி கனவு” வழிகாட்டல் கையேடுகளை வழங்கினார்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர், பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.இந்நிகழ்வின்போது, மாவட்ட கல்வி அலுவலர் சி.சம்பத், கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.