கோபி அருகே உள்ள டி.என் பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை,சிறுத்தை,காட்டுபன்றி,முள்ளம்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது.

இதில் யானை மற்றும் சிறுத்தை அவ்வப்போது உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சஞ்சீவிராயன் கோயில் அருகே சித்தையன் என்பவர் விவசாயம் செய்து வரும் கரும்பு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது காட்டிற்குள் சிறுத்தை ஒன்று முள்ளம் பன்றியை வேட்டையாடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே அங்கிருந்து வெளியே வந்த சித்தையன் அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதைத்தொடர்ந்து அங்கு சென்ற டி.என் பாளையம் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து கரும்புக்காட்டில் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறையினருடன் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் கையில் தடியுடன் சிறுத்தையை தேடினர். ஆனால் நீண்ட நேரமாக தேடியும் சிறுத்தை சிக்கவில்லை.இதனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சஞ்சீவிராயன் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்தொடர்ந்து இதுபோன்ற வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருவதை தடுக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.