கோபிசெட்டிபாளையம் அருகே டி.என் பாளையம் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து சேதம் செய்வதை தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் பங்களாபுதூர் வனசரக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விவசாயிகள் சாலை மறியல் அல்லது உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என் பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது,

இதில் குறிப்பாக யானைகள்,சிறுத்தை உணவு தேடி அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும்,கால்நடைகளை வேட்டையாடி வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது,

இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கொண்டையம்பாளையம், சுண்டக்கரடு உப்பு பள்ளம், அம்பேத்கர் காலனி, எருமை குட்டை ஆகிய பகுதிகளில் யானை அவ்வப்போது வெளியேறி கம்பி வேலிகளை சேதப்படுத்தி கரும்பு,தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், அவ்வாறு வன விலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
வனத்தில் இருந்து யானைகள் வெளியே வருவதை தடுத்து நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் வனப்பகுதிகளுக்கு அகழி, பென்சிங் வேலி ஆகியவற்றை அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்களாபுதூர் வனத்துறை அலுவலகத்தில் வனசரகர் மாரியப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்,
மேலும் இதற்கு உரிய நடவடிக்கை வனத்துறை சார்பில் எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விவசாயிகள் சாலை மறியல் அல்லது உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.